Wednesday, February 20, 2019

உன் அருகே வர முயற்சிக்கிறேன்...




















                                                           
அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை
அதனால் அவள் வீட்டிலிருந்தாள்!
தாத்தா பாட்டி  வேறு ஊரிலிருந்து வந்திருந்தனர்!
இவையே போதுமான காரணங்கள் - நீ
பள்ளி செல்ல விரும்பாதத்திற்கு!
படுக்கையை விட்டு எழ மறுத்து ,
அக்காவுடன் விளையாடி கொண்டிருந்தாய்!
கிளம்ப மறுத்து அம்மாவுக்கு ஆட்டம் காட்டிக்  கொண்டிருந்தாய்!
உண்ண மறுத்து நேரம் கடத்திக்  கொண்டிருந்தாய்!
அலுவலகத்தில் இன்றொரு அவசிய கலந்துரையாடல் எனக்கு
நேரமோ ஓடி கொண்டிருந்தது - உன்
பள்ளி வாகனமும் காத்து கொண்டிருந்தது!
யாவும் சேர்த்தென்னை அழுத்த
உன் முதுகில் அடியென விழுந்தது
என் மனதில் முள்ளென தைத்தது!
பெருக்கெடுத்த உன் கண்ணீரும்
முறைத்தபடி வாகனம் ஏறிய உன் முகமும்
என் மனதை விட்டு அகலவில்லை நாளெல்லாம்!
சாயந்திரம் உன்னை அழைத்துக்கொள்ளும் போது
நீ சிரித்தபடி வருவாயென எனக்குத் தெரியும்!
தெய்வம் இருக்கின்றதா என்பதே புரியாத போது - அது 
மன்னிக்குமா  என்பது யாருக்கு தெரியும்? 
ஆனால் நீ மன்னிப்பாயென்பதை நானறிவேன்! 
உன்னிடம் இந்த கவிதை மூலம் மன்னிப்பு கேட்டு - குழந்தைமையில் 
உன் அருகே வர முயற்சிக்கிறேன்!
மன்னித்து விடடி என் அருமை மகளே
என்றென்றும் அன்புடன் உன் தந்தை !!!