Thursday, November 25, 2010

அப்படித்தான் தோன்றியது


ஒற்றை ரோஜா
ஓர் ஊரையே ஆக்கிரமிக்க முடியுமா?
அப்படித்தான் தோன்றியது
அவள் என் இதயத்தை நிறைத்தபோது!


மின்மினி வெளிச்சத்திற்கு
கண்கள் இரண்டும் குருடாகுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைப் பார்த்தபோது!


ஒரேயொரு நீர்த்துளி
சூரியனுக்கே மைனஸ் டிகிரி குளிர் தருமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னோடு பேசியபோது!


தென்றல் காற்று - ஒரு
பனைமரத்தை வேரோடு சாய்த்திடுமோ?
அப்படித்தான் தோன்றியது
அவள் என்னைத் தீண்டியபோது!


அணில் மூச்சின் வெப்பம் - ஒரு
காட்டையே கொளுத்தி முடிக்குமோ?
அப்படித்தான் தோன்றுகின்றது
அவளைப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு கணமும்!



Tuesday, November 16, 2010

நீயின்றி...



பின்மாலை நேரம்
பேய் மழைமேகங்கள்
பெய்தொழிந்த பின்னே
பேரமைதி!

ஏதோ விசும்பல் சத்தம் கேட்க
விட்டத்தை வெறித்த பார்வையின்
மட்டத்தை தாழ்த்திப் பார்த்தேன்!
உனது அழைப்பின்றி
சீந்தவும் ஆளின்றி
அழுது வீங்கிய கன்னத்தோடு
எனது அலைபேசி...
என்னைப் போலவே!