Tuesday, March 30, 2010

கோர்த்து வைத்த நட்பு








சேர்த்து வைத்த செல்வம் செலவழிந்து போனது!
பார்த்து பழகிய காலம் மெல்ல ஊர்ந்து சென்றது!
வார்த்து எடுத்த தங்கம் தன் பொலிவை இழந்தது - ஒரு நூலில் 
கோர்த்து வைத்த நட்பு எங்கெங்கோ சிதறியது !


Wednesday, February 24, 2010

ஊசிமுனை சரித்திரம்










வாய்ப்புகள் கதவைத் தட்டிய தருணத்தில்
காதினை இறுக மூடிக் கொண்டேன்
தேவதைகள் அப்படியே ஆகட்டும் 
எனக் கூறிய பொழுதில்   
என்னை நானே சபித்துக் கொண்டேன்!
பட்டாம்பூச்சியென சிறகடிக்க வேண்டிய பருவத்தில் 
பட்டுக்கூட்டினுள் அடைபட்டுக் கிடந்தேன்
ஒரு ஊசி முனையில் மாத்திரம் - என் 
சரித்திரம் எழுதி வைத்தேன்

அவளைச்சேர காத்திருக்கின்றேன்




அவள்வரக் காத்திருந்தேன் கால்வலிக்க 
வந்தபின் அவளையே பார்த்திருந்தேன் கண்வலிக்க 
தன் தோழியைப்பர்த்து அவள் முறுவலிக்க 
சிலிர்த்து நின்றேன் மனம் படபடக்க!


நூறடிச்சாலையில் அவள் நடக்கையில்
ஓரடிக்கூட என்மனம் என்னோடு வரவில்லை!
புறவழிப்பாதையை அவள் கடக்கையில் - தன்
ஓரவிழிப் பார்வையில் என்னை உருக்குலைத்தாள்!


யாரோடும் பேசாமல் தனித்து நடந்தாள்
தோழியர் பலர் உடன்வருகையிலும் கூட! 
யாரோடும் பேசாமல் தனித்து நடந்தேன் நானும் 
யாரும் என்னுடன் வரவில்லையென்பதை உணராமலேயே!


பின்னொரு நாளில் என் மனைவியானாள்
என் பிள்ளைக்குத் தாயானாள் 
என்னை தவிக்கவிட்டு தெய்வமுமானாள் - மீண்டும்
அவளைச்சேர காத்திருக்கின்றேன் மனம் வலிக்க!

Monday, February 15, 2010

நிராகரிப்பு






நீள் வட்டப்பாதையைக் கொண்டிருக்கிறது நிராகரிப்பு!
எவ்வளவு தாமதமானாலும்
தொடங்கிய இடத்திலேயே முடியவும் செய்கின்றது!
ஒவ்வொரு நொடியும்
உலகின் ஏதோவொரு உயிரிடத்தே
பதிகின்றது நிராகரிப்பின் சுவடு!
நிராகரிப்பில் விசித்திரம் ஏதுமில்லை!
ஒரு பொருளை விற்கும் வணிகன்
வேறொரு பண்டத்தை வாங்கவும் செய்வான்!
அதைப்போல
எப்போதோ யாராலோ நிராகரிப்புக்குள்ளானோர்
பிறிதோர் கணத்தில் 
எவரையோ நிராகரிக்கக் கூடும்!
சிலர் ஒரே சமயத்தில் 
நிராகரித்தும் நிராகரிக்கப்பட்டும் போகின்றனர்!
அவர்களுக்கு வாய்த்தது குறுகலானதொரு நீள்வட்டம்!
எவ்வளவு தேய்த்தெடுத்தாலும் தீருவதில்லை
ஆழ்மனதில் அப்பிக்கிடக்கும்
நிராகரிப்பின் தொன்மைப் படிவம்!


Wednesday, February 10, 2010

பிப்ரவரி 14





பிப்ரவரி 14'ஐ மையப்படுத்தி ஏதேனும் கவிதை எழுதவில்லையென்றால் நம்மை கவிஞன் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற ஐயப்பாட்டில் கவிதை எழுத உட்கார்ந்தேன்! ம்ஹும்ம்! கற்பனைக் குதிரை புல் மேயச் சென்றிருக்கக் கூடும்! அப்போதுதான் இந்த மரமண்டைக்கு Wordsworth' ன் வரிகள் ஞாபகத்திற்கு வந்தது!
" Poetry is the Spontaneous Overflow of Powerful Feelings." சரி வேறு வேலையப் பார்ப்போம் என்று கிளம்ப எத்தனித்தபோது, கல்லூரி நாட்களில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வந்து கைகொடுத்தது!


அங்காடியில் கிடைக்காதது
அடித்துப் பிடுங்க முடியாதது
அள்ள அள்ளக் குறையாதது
அதிகம் கிடைத்தாலும் திகட்டாதது!
அது என்ன?


அமிழ்தினும் இனியது
அரும்பினும் மெல்லியது
அமைதியைத் தருவது
அனைவரும் விரும்புவது!
அது என்ன?


அன்பானது
அழகானது
அருமையானது
அவசியமானதும் கூட!
அது என்ன?


அனைத்துயிர்க்கும் வாய்த்தது!
ஆதாம் ஏவாளுக்கு மட்டும் வாய்க்காதது!
அது தாயன்பு!

Monday, February 1, 2010

கனவுகள், கேள்விகள், குழப்பங்கள்!





காய்ச்சல் நாட்களில் மட்டும்
ஏன் இத்தனைக் கனவுகள்?
காய்ச்சல் வரக் காத்திருக்கின்றனவோ கனவுகள்?




நேற்று சிரித்த கனவுக்கு
இன்று அழுகின்றான்!
குழப்பதில் ஆழ்ந்தது கனவுகளின் தேவதை!

கனவு





தேர்வினில் தோற்றுப் போவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!


மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!


மலையுச்சியில் இருந்து விழுவதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்து கனவுதான் என உறுதி செய்துக் கொண்டேன்!


என்னைக் காதலிப்பதாக நீ சொல்வதுபோல் ஒரு கனவு
விழித்தெழுந்தேன்
ஏனோ எதையும் உறுதி செய்துக் கொள்ளவில்லை!

செய்தி



ஜனவரி 30
முக்கியச் செய்திகள்
இன்று
மகாத்மா காந்தி மறைந்த தினம்
மு.க அழகிரி பிறந்த தினம்!

பூப்போட்ட நீல நிறச் சுடிதார்



நேற்று நீ என் கனவினில் வந்தாய்
பூப்போட்ட நீல நிறச் சுடிதாரில்!
கட்டிப் பிடித்து முத்தமிட்டேன்!
வெட்கப்பட்டுச் சிரித்தாய்!
இன்று நீ என் எதிரில் வந்தாய்
அதே பூப்போட்ட நீல நிறச் சுடிதாரில்!
ஒரு கணம் தயங்கிவிட்டுதான்
கடந்து சென்றேன் உன்னை!



Monday, January 18, 2010

காதலிலும் கலப்படம்



பிறை நிலவென நெற்றி - அதில்
சிறு அருவியென ஒரு நெற்றிச்சூட்டி!
சங்கென்று கழுத்து - அதை
எங்கென்று தேட வைக்கும் சங்கிலிச்சரங்கள்!


காதினில் குதித்தாடும் தொங்கட்டான்!
களுக்கென்று கைகளில் சிரிக்கும் வளையல்கள்!
இல்லாத இடுப்பின் இருப்பை அறிவிப்பதற்கெனவே
ஒரு ஒட்டியாணம்!
பட்டு பாவை வருகிறாள்! வருகிறாளெனக்
கூவும் கொலுசுகள்!


ம்ம்ம்.....
செம்பு கலந்த தங்கம்தான் பெண்ணின் மேனி தீண்டும்!
தூய சுவர்ணத்திற்கு அந்த மோட்சம் கிட்டாது!
புனைதல் கலந்த காதல்தான் பெண்ணின் மனதை அள்ளும்!
தூய காதல் சீந்துவாரின்றி சாகும்!



Saturday, January 9, 2010

ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்





ராஜிவ் கொலைவழக்கு, மர்மம் விலகும் நேரம்:

சென்னை புத்தக கண்காட்சியில் மிளகாய் பஜ்ஜி கணக்காக விற்பனையான பரபரப்பு புத்தகம் இது! கிழக்கு பதிப்பக ஸ்டாலில் நான் இருந்த பத்து நிமிட நேரத்தில் மூன்று புத்தகங்கள் விற்றதை கண்கூடாக பார்த்தேன்! ஒரு படுகொலை! கொல்லப்பட்டவர் இந்திய தேசத்தின் முன்னாள் பிரதமர்! மிகக் கச்சிதமாக திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றிய சதி! கொலையைச் செய்தது யார் என்று தொக்கி நின்ற கேள்வியில் இருந்து தொடங்குகிறது சரவெடி! சிஐஏ, மொசாட், உல்ஃபா தீவிரவாதிகள் என விரிகிறது விவாதம்! விடுதலைப் புலிகளோ என்று கேள்வி வரும்போது, ஒரு அதிகாரி அடித்துச் சொல்கிறார், புலிகளுக்கு அவ்வளவு சாமர்த்தியம் கிடையாது என்று! புத்தகம் முழுவதும் காவல் மற்றும் உளவு அதிகாரிகளைப் பார்த்து நாம் சிரிப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன!

இந்திய உளவுத்துறை அமைப்பான ரா' வின் கேலிக்கூத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் புத்தக ஆசிரியரும், ராஜிவ் கொலைவழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுத் துறையின் தலைவருமான ரகோத்தமன் அவர்கள்! ஹரிபாபு எடுத்த புகைப்படங்களில் இருந்து விசாரணை சூடு பிடிக்கத் தொடங்குகிறது! சுபா சுந்தரம், என் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கணக்காய் வலிய வந்து மாட்டிக்கொண்டது, நளினி முருகனின் காதல், பல்வேறு ஈழப் போராளிகளின் தமிழகத் தொடர்புகள், தமிழக அரசியல் தலைவர்களுக்கு இருந்த இலங்கைத் தொடர்புகள் என ஆர்வத்தைத் தூண்டும் சங்கதிகள் ஏராளம்! மாஸ்டர் ப்ரைன் ஒற்றைக்கண் சிவராசனின் திட்டங்கள் விறுவிறு! காவல்துறையின் அலட்சியங்கள், உளவுத்துறையின் பூசி மெழுகும் மனப்பாங்கு மற்றும் விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிட்ட முட்டாள்தனங்களைப் படிக்கையில் என்ன கொடுமை சார் இது என்று தோன்றியது! I have a mole in LTTE என்று ஸ்டைலாகச் சொல்லிவிட்டு, அந்த உளவாளி பிராபகரனின் முக்கிய தளபதி கிட்டுதான் என்று ரா'வின் தலைவர் கூறுவதைப் படிக்கையில் அப்படியே முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது!

விசாரணையின் போது பெரிய தலைகளை நழுவ விட்ட அதிகாரிகள், ஜெயின் கமிஷனுக்கு ஒத்துழைக்க மறுத்த சிறப்புப் புலனாய்வுத் தலைவர் கார்த்திகேயன், சிவராசனிடம் அடுத்த தமிழக முதல்வராக வைகோவை ஆக்க வேண்டும் என விவாதித்த வைகோவின் தம்பி, ராஜிவ் கொலை நாளன்று திடீரென ரத்தான கலைஞரின் பொதுக்கூட்டம், இரவு கொலை நடந்து, யார் கொன்றது என்று எதுவும் புரியாத அதிகாலை, பிரதமரிடம் கொன்றது புலிகள்தான் என்று உளவுத்துறையை முந்திக்கொண்டு அழுத்தமாக தெரிவித்த சுப்பிரமணியம் சாமி என்று பகீர் தகவல்கள் ஏராளம்! இரவு பத்து மணிக்கு படிக்கத் தொடங்கி முடித்து பார்த்த போது மணி இரவு ஒன்று! அற்புதமான புத்தகம்!

Saturday, January 2, 2010

சத்தம்


சடசடவெனப் பெய்யுது மழை

சத்தம் மட்டுமே கேட்கின்றது!

வீல்வீலென்று அழுகிறது குழந்தை

காரணம் நானும் அறிகிலேன்!

தடதடவென ரயிலோசை

நேரம் இரவு ஏழு மணியெனப் புரிகின்றது!

டிக்டிக்கென கடிகாரச் சத்தம்

மின்சாரம் நின்றிருக்கக் கூடும்!

சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ

சத்தமில்லாமல் நகர்கின்றது!


பென்சிலுக்கு அழுத பிள்ளையின் குரல்

மளிகைக் கடைக்காரனிடம் மன்றாடிய மனைவியின் குரல்

மருத்துவச் செலவுக்கு மனுப்போட்ட தாயின் குரல்

எல்லாம் இப்போதுதான் இந்த செவிகளுக்கு எட்டுகின்றது!

பார்வையற்றுப் போனபின் தான் காது தெளிவாய் கேட்குமோ என்னவோ!

சத்தங்களோடு வாழும் வாழ்க்கை - ஏனோ

சத்தமில்லாமல் நகர்கின்றது!


இச்! இச்!


ஒரு நாள் யாருமற்ற பூங்காவில் அவளும் நானும் அமர்ந்திருக்கின்றோம். அருகருகில். மழைப்பெய்து ஓய்ந்த ஒரு மாரிக்காலம்! மழை மேகங்கள் முழுதும் விலகாத ஒரு மந்தகாச நேரம்! தனிமையில் அவளும் நானும்! வான் நிலவு தோன்றும் முன்னே பூமியில் ஓர் பூரண நிலவாய் பொலிவான அவள் முகம்! கார்முகில்கள் சற்று சிந்திவிட்டனவோ எனத் தோன்ற வைக்கும் அவள் பட்டுக் கூந்தல், இளங்காற்றின் வேண்டுகோளுக்கு இணங்க மெலிதாய் அலைபாய்கின்றது! அலைபாய்வது அவள் கூந்தல் மட்டுமல்ல என் மனதும்தான். அவள் எதோ சுவாரசியமாக சொல்லிக் கொண்டு இருந்தாள். மெலிதாய் சிரித்தேன். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தாள். நானோ சிரித்துக் கொண்டே இருந்தேன். பேச்சை நிறுத்திவிட்டு என்னைப் பார்த்தாள். சிரிப்பதை நிறுத்தவில்லை நான். மெலிதாய் முறைத்தாள். மேலும் சிரித்தேன். எதற்கு சிரிக்கின்றாய் என்றாள். பதில் சொல்லவில்லை, சிரித்துக் கொண்டே இருந்தேன். செல்லமாய் அடித்தாள். வெடித்துச் சிரித்தேன். நான் போகிறேன் என பொய்க்கோபம் காட்டி புறப்பட எழுந்தாள். அவள் கையைப் பற்றினேன். சட்டென அவளை இழுத்தேன். இச்! இச்!!

மாநகர பேருந்து


பெண்கள் தொட்டாற்சிணுங்கிகள் என அறியப்பட்டவர்கள்!

ஆண் ஸ்பரிசத்தின் சிலிர்ப்பு மறக்கடிக்கப்பட்டது -

மாநகரப் பேருந்தில் பயணிக்கும் மகளிர்க்கு!

கட்டிய கணவன்மார்கள் சற்று மெனக்கெட வேண்டியிருக்கின்றது -

காதல் மனோநிலைக்கு மனைவிமார்களைக் கொண்டு வர!


பைக்கில் செல்லும் ஒரு தம்பதி

சில கண்கள் பெருமூச்சுடன் வெறிக்கின்றன -

பேருந்துக்குள் இருந்து!

ஏனோ பேருந்து பயணத்தையே நாடுகின்றது

சில முதிர்கன்னிகளின் மனம் மட்டும்!